Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


இலங்கையில் கொரோனா இரண்டாம் கட்டத்தின் ஆரம்பமா? ஒன்றும் கூறமுடியாது என்கிறார் இராணுவத் தளபதி


2020-07-15 14874

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்டத் தாக்கம் உருவெடுத்துள்ளதா என்பதை தற்போது கூறமுடியாது என்று இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் எதிர்வரும் நாட்களுக்கு செயற்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் அவர் வழங்கியுள்ளார்.

கண்டி - ஸ்ரீதலதா மாளிகையினால் நடத்தப்படுகின்ற கண்டி எசல பெரஹரா நிகழ்வுக்கான வீதி ஒளிரூட்டும் பணியை ஒவ்வொரு வருடமும் இலங்கை இராணுவம் செய்து வருகின்றது.

அந்த வகையில் விரைவில் நடைபெறவுள்ள கண்டி பெரஹராவுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவும், அங்கு வழிபாடுகளில் ஈடுபடவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்றைய தினம் காலை தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.

வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் அவர் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

குறிப்பாக கொரோனா வைரஸின் இரண்டாவது கட்டத் தாக்கம் இலங்கையில் உருவெடுத்து வருவதாக மக்களிடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளமை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராணுவத் தளபதி, படையினரை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்போவதில்லை என்றும் கூறினார்.

Advertiesment